Wednesday, May 16, 2012

பிரிவோம் சந்திப்போமா?


உறவால், நட்பால் நாம் சேர்த்த துணைகள்,
காலத்தின் சுழலில் சிக்கி பிரியக்கூடும்.
ரயில் நிலையங்களிலோ,
கல்லூரி சாலைகளிலோ,
மண்டப வாசல்களிலோ,
தொலைபேசி துண்டிப்புகளிலோ.

விடைபெற்று செல்லும் உறவுகள் சில..
வினா கேட்டு செல்லும் உறவுகள் பல..
உள்ளத்தில் நுழைகையில் விருந்தாளியாயிருந்து,
விடைபெற்று செல்கையில் பங்காளியாய் பிரிந்து..
இருவரும் சொல்லி கொள்வது,
மீண்டும் சந்திப்போம் என்று..

நான் அறிவேன், எதிர்க்காலத்தில் சந்திக்க போவது,
நாம் அல்ல.. நாளைய நானும், நாளைய நீயும்..
எனினும் புன்னகையோடு வழியனுப்புவேன்,
ஏனெனில், நாளை உன்னை பார்க்கும் போதும்,
எனக்கு நீ தான் ஞாபகத்திற்கு வருவாய்.